Nov 11, 2009

தமிழ் மீனவன்...

 



மீனவர்கள் நிலை பற்றி ஆவணப்படம் எடுப்பதாகவும் அதற்கு ஒரு பாடல் வேண்டுமெனவும் தோழர் கேட்க அதற்காய் தயார் செய்த பாடல் இதோ...

பல்லவி.

புயலு வந்து கொன்னதெல்லாம்
பழைய சேதிங்க..சிங்கள
பயலு வந்து அடிக்கிறானே
என்ன நியாயங்க ?சொல்லுங்க
என்ன நியாயங்க ?

சரணம் 1

முள்ளில்லா மீனு வாங்க
கடைக்கு போறீங்க-நாங்க
நெஞ்சமெல்லாம் முள்ளாக
நிக்கிறோமுங்க ஆமா..
நிக்கிறோமுங்க...

வலவீசி வலவீசி
தேடிப்போனேமே..
வலயெல்லா மீனாக
நாங்கெல்லா பிணமாக
கெடக்குறோமுங்க....

சரணம் 2

புடிச்சு வந்த மீனுக்கிங்க
துணியில்லீங்க..
புடிக்க போன எங்களுக்கும்
துணியில்லீங்க..ஆமா
துணியில்லீங்க....
அம்மணமா நிக்க வச்சு
அழகு பாக்குறான்-சிங்களவன்
அளந்து பாக்குறான்-தமிழனை
அளந்து பாக்குறான்....

கட்டிவச்ச பாலமொன்னு
முழுகி போச்சாமே ?
கட்டுகதை நல்லத்தா
அவுத்து விட்டிங்க
எல்லைக்கோடு மட்டும்
நீங்க போட்டு வையுங்க...
கடலுல போட்டு வையுங்க...
அழுத்தமா போட்டு வையுங்க..

No comments:

Post a Comment